தமிழ் இராச்சிய வரலாற்றில் மிகப் பிந்திய அடையாளமாக உள்ள மந்திரிமனை அழிந்து போனால் தமிழர் வரலாறும் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. ஜமுனா ஏரி, மந்திரிமனை சங்கிலியன் முகப்பு என்பன யாழ்ப்பாண மண்ணின் தமிழர் வரலாற்றின் முக்கியத்துவம் மிக்க பகுதிகள் எனவும், அவற்றைத் தொடர்ந்து பாதுகாக்க அநுர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சுட்டிக்காட்டினார்.

இன்று யாழ். நல்லூர் மந்திரி மனையை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்ட போதே அவர் இதனைத்தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
யாழ். மாவட்டத்தின் வடக்கு, கிழக்கு மக்களுடைய பூர்வீக அடையாளங்களை நிலை நிறுத்துகின்ற மிக முக்கியமாக சங்கிலிய மன்னன் வாழ்ந்த காலத்தில் இருந்த மந்திரிமனையின் ஒரு பகுதி மழையால் இடிந்து வீழ்ந்தது.

இது இந்தக் கட்டடத்தை மீள அமைத்து இந்த தொல்பொருள் அடையாளத்தை எங்களுடைய பூர்வீக அடையாளமாக நிலை நிறுத்துவதற்குரிய மிக முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கின்றது.
அதன் அடிப்படையில் இன்று யாழ். நல்லூர் பகுதியில் உள்ள மந்திரி மனையை யாழ். மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு அதற்குரிய ஆலோசனைகளை பெற்றுள்ளேன்.

இந்த மந்திரி மனையை பாதுகாப்பது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம் என்றார்.















