-கஜிந்தன்-
தற்போதைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட உள்ள பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணை மானிப்பாய் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மானிப்பாய் பிரதேச சபை அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை காலை அதன் தவிசாளர் தலைமையில் ஆரம்பமானதையடுத்து இலங்கை தமிழரசு கட்சியின் சபை உறுப்பினர் ரமணன் பேசுகையில்,
பிரஜா சக்தி என்பது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமானதாகும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஒவ்வொரு பிரதேசத்திலும் அபிவிருத்திகளை செய்து வருகின்ற நிலையில், அரசியல் நோக்கத்திற்காக இந்த குழுவானது கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியிலும் சமூக அமைப்புகளின் மத்தியிலும் குழப்பகரமான நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளானது சுயாதீனமாக இயங்குகின்ற கட்டமைப்பை கொண்டுள்ள நிலையில், எச்சந்தர்ப்பத்திலும் இந்த குழுவானது இயங்க முடியாது.
கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டு வரும் பிரஜா சக்தியை என்ற அமைப்பானது எமது சபையின் விதி மற்றும் நிர்வாக கட்டமைப்புகளிலும் எந்தவொரு சிபாரிசுகளையும் கோர முடியாது என குறிப்பிட்டு பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணையை சபையில் முன்வைத்தார்.
இதையடுத்து சபை உறுப்பினர்கள் பிரேரணை தொடர்பில்தமது கருத்துகளை வெளியிடுகையில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றது. இதையடுத்து பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஐந்து உறுப்பினர்கள் பிரேரணைக்கு எதிராகவும், சபையில் இருந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களும் பிரேரணைக்கு ஆதரவாகவும் வாக்களித்த நிலையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.


















