-கஜிந்தன்-
யாழ்ப்பாணத்திற்கு பொங்கல் பண்டிகைக்காக வரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஊர்காவற்துறை கடற்கோட்டை விவகாரத்திற்கு தீர்வு தர வேண்டும் என ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த வேண்டுகோளை விடுத்த அவர் இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:-
ஊர்காவற்துறை கடற்கோட்டை என்பது ஒரு பாரம்பரிய, பிரபல சுற்றுலாத்தலமாக காணப்படுகின்றது. இது ஊர்காவற்துறை பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படுகின்றது.
ஆனால், அது தற்போது கடற்படையினரின் கட்டுப்பட்டில் உள்ளது. இதனை தொல்லியல் திணைக்களத்தினர் மற்றும் கடற்படையினர் பயன்படுத்தி வருகின்றனர். கடற்படை அல்லது தொல்லியல் திணைக்களத்தின் பராமரிப்பில் கடற்கோட்டை இருப்பது எமக்கு பிரச்சனை இல்லை.
இந்த கடற்கோட்டைக்கு ஊர்காவற்துறை துறைமுகத்தில் இருந்து 4 நிமிடங்களில் செல்லக்கூடிய நிலை காணப்படுகிறது. எனவே எமது ஆளுகைக்குள் உள்ள துறைமுகத்திலிருந்து, எமது ஆளுகைக்குள் உள்ள கடற்கோட்டையை சென்று பார்வையிடுவதற்கு ஜனாதிபதி ஆவன செய்ய வேண்டும்.
எமது பாரம்பரிய துறைமுகங்களில் ஒன்றான ஊர்காவற்துறை துறைமுகத்தில் இருந்து கடற்கோட்டைக்கு சென்று வருவதன் ஊடாக பிரதேச சபையின் வருமானம் அதிகரிக்கும். அத்துடன் எமது பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளது என்றார்.


















