-செ.ரவிசாந்-
1961 ஆம் ஆண்டு இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பான வரலாற்றுப் பதிவுகளைக் கொண்ட முதலாவது நூலான அமைதிவழிப் போராட்டமும் அறவழிச் சிந்தனையும் எனும் நூலின் வெளியீட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் கொழும்புப் பல்கலைக்கழகச் சட்டப்பீடப் பேராசிரியர் ஏ.சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதுவரை வெளிவராத வரலாற்றுத் தகவல்களுடன் சுப்பையா இரத்தினேஸ்வரன், மழவராயன் விஜயபாலன் ஆகியோரால் மீள்பதிப்பாகத் தொகுக்கப்பட்ட நூலே வெளியிடப்படவுள்ளது.
இதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறைத் தலைவர் திருமதி கோசலை மதன், யாழ்ப்பாணம் தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் பேரருட்கலாநிதி எஸ்.ஜெபநேசன், முன்னாள் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் செயலாளர் இ. பேரின்பநாயகம், வழக்கறிஞர் சுவஸ்திகா அருள்லிங்கம், அரசியல், சமூக ஆய்வாளர் ம.நிலாந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கவுள்ளதுடன், நிகழ்வின் இறுதியில் பதிப்பாசிரியர் வைத்தியகலாநிதி சு.இரத்தினேஸ்வரன் நன்றி உரை நிகழ்த்தவுள்ளனர்.
















