-கஜிந்தன்-
வடக்கு மாகாண கல்விக் கண்காட்சி எதிர்வரும் 30 ஆம், 31 ஆம் திகதிகளில் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது
ரீச்மீயின் செயற்பாட்டாளர் அஞ்சலிகா யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயத்தை தெரிவித்தார்.
நாங்கள் வருடா வருடம் யாழ்ப்பாணத்தில் இலவச கல்விக் கண்காட்சியை முன்னெடுப்பது வழமை. அந்தவகையில் இந்த கல்விக் கண்காட்சியை இம்முறை மிகவும் பிரமாண்டமான வகையில் ஏற்பாடு செய்துள்ளோம்.
சதுரங்கப் போட்டி, நடனப் போட்டி, பாடல் போட்டி, திரைப்படத் துறை தொடர்பான பயிற்சிகள், உணவுத் திருவிழா, வேலை வாய்ப்புகள், கல்வி கற்பதற்கான புலமைப் பரிசில்களுடன்கூடிய வாய்ப்புகள், வெளிநாட்டு கல்வி வசதி என்பன இந்த கண்காட்சியின்போது இடம்பெறும்.
கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் கல்வியில் முதலிடத்தில் இருந்தாலும் கூட தற்போது ஒரு சரிவை சந்தித்துள்ளது. எனவே அதனை மீளவும் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம்.
க.பொ.த. சாதாரண தரம் கற்றவர்கள், க.பொ.த உயர்தரம் கற்றவர்கள் மற்றும் பல்கலைக்கழக கல்வியை தொடர்பவர்கள் என அனைவருக்கும் இந்தக் கண்காட்சி பயனுள்ளதாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.


















