பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோரின் தொழில்முயற்சிகளுக்கு தேசிய ரீதியிலான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுக்கும் முகமாக ‘வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள் – 2025’ எனும் விருது வழங்கும் நிகழ்வில் 16 பிரிவுகளில் 33 விருதுகள் வழங்கப்படவுள்ளன எனவும், அதற்காக தொழில் முனைவோரை விண்ணப்பிக்குமாறும் யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தினர் கோரியுள்ளனர்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தனர்.
மன்றத்தினர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக வட மாகாணத்தின் சிறந்த தொழில்முனைவோர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் ‘வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள் – 2025’ நிகழ்வானது தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.
வட மாகாணத்தின் தொழில்முனைவோருடைய திறன்கள் அவர்களின் புத்தாக்கங்கள், தலைமைத்துவம் மற்றும் பொருளாதார பங்களிப்புக்கள் போன்றவற்றை பாராட்டுவதோடு தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து, சிறந்த தொழில்முனைவோரை தேசிய மட்டத்தில் அடையாளம் காணப்படுவதை உறுதி செய்வதே இவ்விருதுகளின் பிரதான நோக்கமாகும்.
குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோரின் தொழில்முயற்சிகளுக்கு தேசிய ரீதியிலான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு எமக்குரியது.
வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள் – 2025இல் பெண் தொழில்முனைவோர், இளம் தொழில்முனைவோர், வேளாண்மை, உணவு சார் உற்பத்திகள், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, மீன்பிடி, கல்வி, ஏற்றுமதிகள், கட்டட நிர்மாணம் மற்றும் உட்கட்டமைப்பு, கைவினை மற்றும் படைப்புத்துறை உள்ளிட்ட 16 பிரிவுகளில் மொத்தம் 33 விருதுகள் வழங்கப்படவுள்ளன.
வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள் – 2025க்கான விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து எம்மிடம் உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்பான தொழில் முனைவோரே வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள் கிடைப்பதன் மூலம் நீங்கள் பெறும் நன்மைகள்
- அங்கீகாரமும் நம்பகத்தன்மையும்
- இலவச சந்தைப்படுத்தல்
- வலுவான வலையமைப்பு
- ஊழியர்களின் மனதளவிலான தன்னம்பிக்கை உயரும்
- உங்கள் வியாபார வளர்ச்சியில் இன்னுமோர் அத்தியாயத்தின் வாயில்
- உங்கள் தனிப்பட்ட மற்றும் வணிகக் குறி மதிப்பு
விருதுகள் உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் படிக்கட்டுக்கள். விருதுகளுக்காக நீங்கள் விண்ணப்பிக்கும் செயல்முறை தான் உங்கள் வியாபாரத்தை அல்லது சேவையை நீங்களே ஒருமுறை மதிப்பாய்வு செய்ய கிடைக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும் என தெரிவித்துள்ளனர்.

















