யாழ்.மாவட்டத்தில் 2018, 2019 ஆம் ஆண்டுகளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான மிகுதிக் கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்துக்கு முன்னால் நேற்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து யாழ்.மாவட்ட செயலக முன்றலில் வைத்து குறித்த வீட்டுத் திட்ட பயனாளிகள் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் கோரிக்கை மனுவும் கையளிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வீட்டுத் திட்ட பயனாளிகள் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்:-
2019 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் இன்று வரையும் தமக்கு வழங்கப்படவில்லை. இதனால் வீட்டுத் திட்டங்களை பூர்த்தி செய்ய முடியாதுள்ளது. குடியிருந்த தற்காலிக வீடுகளை அகற்றிவிட்டோம். கடன்பட்டும் வீட்டுத் திட்டத்தை பூர்த்தி செய்ய முடியாதுள்ளது.
இவ்வாறு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது அன்றாட வாழ்க்கையை நடத்திவருவதாக தெரிவித்தனர். வும் தமது பக்க நிலைமைகளை தெரிவித்தார்கள்.
இதற்கு பதிலளித்த மாவட்ட அரசாங்க அதிபர்:-
2018 ஆம் ஆண்டு 1883 வீடுகளும், 2019 ஆம் ஆண்டு 1933 வீடுகளுமாக மொத்தமாக 3816 வீடுகள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மூலமாக ஆரம்பிக்கப்பட்டு பகுதி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய மிகுதி கொடுப்பனவுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை.
தொடர்பாக வீடமைப்பு நிர்மாணிப்பு அமைச்சர் மற்றும் துறைசார் திணைக்களங்களுடனும் கலந்துரையாடியுள்ளதாகவும், மேலும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களிலும் ஆராயப்பட்டுள்ளது எனவும், உங்களது கோரிக்கைகள் தொடர்பில் தங்களால் கையளித்த கோரிக்கை மனுவினை உரியவர்களுக்கு தெரியப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இவ்வாண்டு இத் திட்டங்களில் உள்ள 66 வீடுகளுக்கு தலா 10 இலட்சம் வீதம், ஏற்கனவே வழங்கப்பட்ட தொகையினை கழித்து பயனாளிகளுக்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.


















