இலங்கை மத்திய வங்கியின் திருமலை பிராந்திய அலுவலகத்தின் ஒழுங்கமைப்பில் நிதியியல் விழிப்புணர்வை மக்களுக்கு வழங்கும் நோக்கிலான ‘நிதியறிவுக் கண்காட்சி ‘ இன்று திருமலை இந்துக் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக பிராந்திய முகாமையாளர் கருப்பையா பிரபாகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை மத்திய வங்கி தேசிய ரீதியில் முன்னெடுக்கின்ற நிதியறிவுக் கண்காட்சி என்ற நிகழ்வானது நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கி திருகோணமலை பிராந்தியத்தின் ஏற்பாட்டில்
காலை 8.30 மணிமுதல் இரவு 7.00 மணிவரை குறித்த கண்காட்சி இடம்பெறவுள்ளது. குறித்த கண்காட்சியில் வங்கிச் சேவைகள். கொழும்பு பங்கு பரிவர்த்தனை – முதலீட்டு வழிகாட்டல்கள், ஊழியர் சேமலாப நிதியச் சேவைகள், ஊழியர் நம்பிக்கை நிதிய சேவைகள், கொடுகடன் தகவல் பணியகத்தினுடைய சேவைகள் உள்ளிட்டவையும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி வழிகாட்டல்கள், தொழில் முயற்சியாளர் சந்தை, நாணய அரும்பொருட்காட்சியகம் என்பனவும் இடம்பெறவுள்ளன.
குறிப்பாக இலங்கை கொடுகடன் பணியகம் நடமாடும் சேவையில் இருப்பதால் இங்கு பொதுமக்கள் இலவசமாக தங்களுடைய கிறிப் அறிக்கையினை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் பாடசாலை மாணவர்களுக்காக நாணய அரும்பொருட் காட்சியகம் இயங்கவுள்ளது.
இதன்மூலம் ஆரம்ப காலத்தில் இருந்து நாணயம் எவ்வாறு வளர்ச்சியடைந்து சென்றிருக்கிறது என்பதையும் வெளியிடப்பட்ட ஞாபகார்த்த நாணயக் குற்றிகளையும் பார்வையிடக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே இந்த நிதியியல் கண்காட்சியானது மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் – என்றார்.


















