2025 ஒக்டோபர் மாதம் நிதியியல் அறிவு மாதமாக இலங்கை மத்திய வங்கி பிரகடனப்படுத்தியுள்ளது.
இதற்கு அமைவாக ‘நிதியியல் ரீதியாக அறிவுமிக்கதொரு இலங்கை’ எனும் தொனிப்பொருளில் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் கே.பிரபாகரன் தலைமையில் இலவச நிதி அறிவுக் கண்காட்சி ஒன்று திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் று. பு. ஆ. ஹேமந்தகுமார பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கண்காட்சியில் வங்கிச்சேவைகள், கொடுகடன் தகவல் பணியகம், முதலீட்டு வழிகாட்டல்கள் மற்றும் தொழிற்பயிற்சி என்பன உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இடம்பெற்றிருந்தன.
மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட பல நிதி நிறுவனங்கள், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விளக்கங்களை வழங்கி விழிப்புணர்வூட்டும் பணிகளில் ஈடுபட்டன.
மத்திய வங்கியின் பிராந்திய அபிவிருத்தி பிரிவுப் பணிப்பாளர் சத்குரு ஆரியதாச சிறப்பு உரையாற்றினார். காலை 8.30 முதல் இரவு 7மணி வரை நடைபெற்ற கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
மேலதிக அரச அதிபர் எஸ்.சுதாகரன் உள்ளிட்ட நிதி நிறுவன முகாமையாளர்களும் நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்டனர்.


















