வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவித்துள்ளார். அவரால் இன்று வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்தாவது,
வங்காள விரிகுடாவில் நாளை வெள்ளிக்கிழமை அந்தமான் தீவுகளுக்கு அருகாக மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது.
இந்தத் தாழமுக்கமும் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள மசிலிப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அத்தோடு எதிர்வரும் சனிக்கிழமை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


















