-பா.சதீஸ்-
காட்டு யானை ஒன்று வீதிக்கு வந்ததையடுத்து, பயணிகள் பெரும் அசௌகரியத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகினர்.
பிரதான வீதியான புதுக்குடியிருப்பு – ஒட்டிசுட்டான் வீதியில் நேற்றுமுன்தினம் மாலையில் யானை ஒன்று திடீரென வீதிக்குள் நுழைந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் மற்றும் பயணிகள் தங்களது பயணத்தை நிறுத்தி அச்சத்துடன் நிற்க நேர்ந்தது.
வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் வீதியின் ஓரங்களில் தஞ்சம் புகுந்து திகைத்து நின்றனர். யானை சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக நடுவீதியில் நின்று பயணிகளை அச்சுறுத்தியிருந்ததுடன் போக்குவரத்தும் முழுமையாக பாதிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் குறித்த வீதிக்கு யானைகள் அடிக்கடி வருவதால் மக்கள் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியால் பயணத்தை தொடரும் மக்கள் இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.


















