-வி.சரவணன்-
ஏற்றுக்கொள்ளப்பட்ட மீனவப் பிரச்சினைகளின் தீர்வை முன்னோக்கிய மீனவ மாநாடு வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் நேற்று முல்லைத்தீவு நகரில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு கடற்கரை வளாகத்திலிருந்து சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் மற்றும் இந்திய மீனவர்களின் அத்து மீறல் செயற்பாடுகள் உள்ளிட்ட மீனவ மக்களுக்கு பாதகமான விடயங்களை கட்டுப்படுத்தி பாரம்பரிய கடற்றொழிலாளர்களைப் பாதுகாப்பதுடன், கடல்வளத்தினையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று வடமாகாண மீனவ மக்களால் முன்னெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து “ஏற்றுக்கொள்ளப்பட்ட மீனவப் பிரச்சினைகளின் தீர்வை முன்னோக்கிய மீனவமாநாடு” ஆரம்பமானது.
குறித்த மாநாட்டில் கடற்றொழிலாளர்களின் நலன்சார்ந்தும், கடல்வளத்தினைப் பாதுகாப்பது சார்ந்தும் முல்லை பிரகடனம் என்ற பெயரிலான பிரகடனம் ஒன்று முன்மொழியப்பட்டது.
அத்தோடு குறித்த பிரகடனம் நிகழ்வில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட விருந்தினர்களிடமும் கையளிக்கப்பட்டிருந்து.
குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி மற்றும் மாநாட்டில் வன்னி மாவட்ட நாடாளுமன்று உறுப்பினர் துரைராசா ரவிகரன், உள்ளுாராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய வட மாகாண கடற்றொழிலாளர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















