-வி.சரவணன்-
மன்னார் – பனங்கட்டிக்கொட்டு மீனவர் சங்கத்தினரை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
பனங்கட்டிக்கொட்டு மீனவர் சங்க கட்டடத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு இடர்பாடுகள் தொடர்பில் இதன்போது மீனவர் சங்கத்தினரால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அத்தோடு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் மீனவர் சங்கத்தினர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளித்தனர்.
மீனவர் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் உரியதரப்பினரின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அக்குறைபாடுகளைத் தீர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்டத் தலைவர் பாலுச்சாமி ஜெயக்குமார், மன்னார் நகரசபை உறுப்பினர் சோமநாதன் பிரசாத் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















