-கஜிந்தன்-
யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக் கைது குறித்து மேலும் தெரியவருவதாவது:-
கடந்த சில தினங்களுக்கு முன்னர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள கள்ளுத் தவறணை ஒன்றுக்கு சென்ற நபர் ஒருவர் கள்ளுத் தவறணையில் வைத்து இருவரால் தாக்குதல்களுக்கு உள்ளானார்.
தாக்குதலுக்கு உள்ளான அவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
அவர்மீது தாக்குதலை மேற்கொண்ட இருவரும் தலைமறைவாகி இருந்த நிலையில், ஒருவர் நேற்று திங்கட்கிழமை காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் பின் அவர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று தெரிவித்துள்ள காங்கேசன்துறை பொலிஸாரால், தலைமறையான மற்ற நபரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.


















