-ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான வலைகள் நாசம்-
-கஜிந்தன்-
இந்திய இழுவைப் படகுகளால் யாழ்ப்பாணம் – மயிலிட்டி மீனவர்களின் ஒரு கோடி ரூபா பெறுமதியான தொழில் முதல்கள் நாசம் செய்யப்பட்டுள்ளதாக மயிலிட்டி கடற்றொழில் சங்கத்தின் தலைவர் குணரத்தினம் குணராஜன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
நேற்று முன்தினம் இரவு 10.00 மணியளவில் நூற்றிற்கும் மேற்பட்ட இந்திய இழுவைப் படகுகள் எமது மயிலிட்டி கடற்கரையில் இருந்து சுமார் 2 கீலோமீட்டர்களுக்குள் உள்நுழைந்து அட்டகாசம் செய்துள்ளன.
இதனால் 20 மீனவர்களின், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வலைகள் உள்ளிட்ட தொழில் உடமைகள் நாசம் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கு நேற்று காலை தெரியப்படுத்தினோம். அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்திய மீனவர்களின் இந்த அட்டகாசத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு எத்தனை ஆண்டுகள் தேவை? வாய் பேச்சிற்கு மட்டும் நடவடிக்கை எடுப்பதாக கூறினால் போதுமா?
தொழில் முதல்களை இழந்த மீனவர்கள் தொடர்ந்து தொழிலில் ஈடுபடுவதற்கு வழி தெரியாமல் தவிக்கின்றனர். இந்த விடயம் அரசாங்கத்துக்கு தெரியுமா? நாங்கள் பல்வேறு பிரச்சினைகளின் மத்தியிலே கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றோம். இந்நிலையில் எமது தொழில் முதல்களை இவ்வாறு தொடர்ச்சியாக அழித்து வந்தால் நாங்கள் என்ன செய்வது?
சட்டவிரோதமாக அத்துமீறி நுழைபவர்களை கட்டுப்படுத்துவதற்கு ஏன் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை அரசினால் எடுக்க முடியவில்லை? தயவுசெய்து இனியாவது எமது மீனவர்களின் நிலையை அறிந்து விரைவாக ஒரு நிரந்தர நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் என்றார்.


















