செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறும் நோக்கில் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான மரணதண்டனைக் கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை, காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் இவ்வார இறுதியில் சந்திக்கவுள்ளனர்.
கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும் 09.07.2025 எனும் திகதியிடப்பட்ட கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் இழைத்த குற்றங்கள், வலிந்து காணாமலாக்கப்படல்கள், மனிதப் புதைகுழிகள் மற்றும் அவற்றுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்களின் பெயர், விபரங்கள் உள்ளிட்ட சகல உண்மைகளையும் வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் சோமரத்ன ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிட்ட விடயங்களுடன் தொடர்புடைய சில உண்மைகளையும், எதிர்வரும் காலங்களில் சாட்சியம் வழங்குவதற்குத் தயாராக உள்ள விடயங்களையும் உள்ளடக்கி கடந்த ஒக்ரோபர் மாதம் 4 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் சோமரத்ன ராஜபக்ஷ தனது சட்டத்தரணி முன்னிலையில் சத்தியக்கடதாசி வழங்கியிருந்தார்.
அந்த சத்தியக்கடதாசியின் ஒரு பிரதி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன் மேலும் இரு பிரதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடமும், உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகளிடமும் கையளிக்கப்பட்டன.
இவ்வாறானதொரு பின்னணியில் ஏற்கனவே கடந்த ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்த காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள், கடந்த நவம்பர் மாதம் 26 அல்லது 27 ஆம் திகதி மீண்டும் அவரைச் சந்திப்பதற்கு சிறைச்சாலைகள் ஆணையாளரிடம் அனுமதி கோரியிருந்தனர். இருப்பினும் டித்வா சூறாவளியை அடுத்து அச்சந்திப்புக்கான அனுமதி வழங்கல் தாமதமடைந்த நிலையில் இவ்வார இறுதியில் சந்திப்பு நடைபெறவுள்ளது.


















