-சமகால அரசியல் அரங்கில் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு-
தமிழகத்தின் ஒவ்வொரு பிரபல்யமான திரைப்பட நடிகர்களுக்கும் இங்கே ரசிகர்கள் இருப்பதைப் போன்று, தமிழக அரசியல் தலைவர்களுக்கும் ரசிக மனப்பான்மையோடு இங்கே ஆதரவுத்தளம் உருவாகியிருக்கிறது. இவர்கள் பொதுவெளியில் தாங்கள் ஏற்றுக்கொள்ளாத தமிழகத் தலைவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
இந்த விமர்சனங்கள் மூலம் ஒவ்வொரு தலைவர்களின் பின்னாலும் உள்ள அவர்களது கோடானுகோடி தொண்டர்களை எங்களிடம் இருந்தும், ஈழப்பிரச்சினையில் இருந்தும் நாமே அந்நியப்படுத்துகிறோம் என்ற கசப்பான உண்மையை நாம் புரிந்துகொள்ள
வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு கடந்த செவ்வாய்க்கிழமை நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இவ்வுரையரங்குக்கு தலைமையேற்று உரையாற்றும்போதே
ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது கருணாநிதி தலைமையிலான அரசு யுத்தத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்ற அபிப்பிராயமும், ஆதங்கமும் ஈழத்தமிழ் மக்களிடையே உண்டு. இன்றுவரை நீடிக்கும் உணர்வுநிலைப்பட்ட இந்த
அபிப்பிராயத்தை எவரும் புரிந்துகொள்ள முடியும்.
ஆனால், அரசியல் அறிவார்ந்த ரீதியாக இதே அபிப்பிராயத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் நாம் தமிழகத்துடனான உறவைப்பேண முடியாது என்பதே யதார்த்தம்.ஈழத்தமிழர்களுக்காகத் தமிழகத்தில் முத்துக்குமார் உட்பட எத்தனையோ பொதுமக்கள் தீக்குளித்து மரணித்திருக்கிறார்கள். ஆனால், இன்று தமிழக அரசியல் தவைர்கள் சிலர் ஈழப்பிரச்சினை தொடர்பாகப் பேசி வந்தாலும் தமிழக மக்கள் பொதுவாக ஈழத்தமிழர் அரசியல் பிரச்சினைகள் பற்றி அறிவதில் ஆர்வம் குன்றியவர்களாக இருக்கிறார்கள்.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் எமது அரசியல் தலைவர்கள் தமிழ்நாட்டுடன் அரசியல் ரீதியான உறவைப் பேணாததே இதற்கான காரணம்.
எமது விடுதலைப் போராட்டத்தில் எப்போதும் பின்தளமாகத் தமிழக மக்களே இருந்து வந்துள்ளார்கள்.
ஆயுதப் போராட்டத்தில் பின்களப் பணியாளர்கள் அவர்கள்தான். இந்தத் தொப்பிள்கொடி உறவை நாமாகவே அறுத்துவிடக்கூடாது. அந்த ஏழுகோடி தமிழ் மக்களின் ஆதரவுப் பலம் எங்களுக்கு எப்போதும் வேண்டும். இதைப் புரிந்துகொண்டு தமிழகத்தின் உட்கட்சி அரசியலுக்குள் நுழைந்து நாம் கருத்துச் சொல்வதை முதலில் தவிர்க்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


















