-கஜிந்தன்-
மானிப்பாய் சபை அமர்வின் போது கணக்கறிக்கை தொடர்பில் எழுந்த தர்கத்தால் கணக்கறிக்கை சபை உறுப்பினரால் தூக்கி வீசப்பட்ட சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை காலை தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது கணக்கறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கணக்கறிக்கையை உடனே வழங்குவதால் அதில் உள்ள விடயங்களை ஆராய்ந்து பிழைகளை உடனே கண்டுபிடிப்பது கடினம் என்பதால் கணக்கறிக்கையினை கூட்டம் நடைபெறுவதற்கு முன்னைய நாட்களில் வழங்க வேண்டும் என உறுப்பினர் நா.பகீரதன் தெரிவித்தார்.
இதற்கு தவிசாளர் ஜெசீதன் கணக்கறிக்கையில் தவறு உள்ளது என்றால், அந்த அறிக்கை சபையில் முன்மொழிந்து, வழிமொழிய முன்னர் அதில் என்ன தவறு உள்ளது என்று கூற வேண்டும். இதைவிடுத்து எல்லாம் முடிந்த பின்னர் கூறக்கூடாது என்றார்.
இதையடுத்து தவிசாளருக்கும், குறித்த உறுப்பினருக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டது. வாய்த்தர்க்கம் உச்சமடையவே அவ்வுறுப்பினர் தனது கையில் இருந்த கணக்கறிக்கையை தூக்கி சபையில் வீசி எறிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


















