-இ.கலைஅமுதன்-
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு- கிழக்கில் நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச் சேர்க்க வேண்டும் என தென்கையிலை ஆதீன முதல்வர் மற்றும் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு- கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அதற்கு பொதுமக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
இதனொரு கட்டமாக தென்கையிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் மற்றும் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேலை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் நேற்று நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்பின்னர் கருத்து தெரிவித்த திருகோணமலை மறை மாவட்ட ஆயர், தமிழ் மக்களின் தேவைகள் பலவாறாக இருந்தாலும் பல வழிகளில் அவை நிராகரிக்கப்படுகின்றன அல்லது பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றன. இதை வலியுறுத்தி நடைபெறும் போராட்டம் வெற்றி பெற அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தென்கையிலை ஆதீனம், 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. அன்றிலிருந்து தமிழ் மக்களுக்கு சாபக்கேடான நிலையே அமைந்தது. அந்த சுதந்திர தின நாளை கரி நாளாக அனுஷ்டிக்க வருங்கால சந்ததியான பல்கலைக்கழக இளைஞர்கள் முயற்சிகளை முன்னெடுக்கிறார்கள். அந்த முன்னெடுப்புக்கு இலங்கையில் வாழ்கின்றவர்கள் புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்ற மக்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டும் என்றார்.


















