நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு தினமும் சில மணி நேரங்கள் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார எச்சரித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுவரை உத்தியோகபூர்வமாக நீர்வெட்டை அமல்படுத்தவில்லை. இருப்பினும் நிலவும் கடும் வரட்சியான வானிலை நீடிக்குமானால் வரும் வாரங்களில் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் நீர் விநியோகத்தைப் பராமரிப்பதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பிரதான நிலையங்களின் உற்பத்தித் திறன் இதுவரை பாதிக்கப்படவில்லை. எனினும், உயரமான பகுதிகளில் அமைந்துள்ள இடங்களுக்கு தற்போது குறைந்த அழுத்தத்திலேயே நீர் விநியோகம் செய்யப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், வானிலை சீராகும் வரை பொதுமக்கள் தங்களுக்குக் கிடைக்கும் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


















