முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்கும் சட்டமூலம் மீதான உயர் நீதிமன்ற தீர்ப்பை சபாநாயகர் பெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தீர்ப்பை நாளையதினம் சபாநாயகர் நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதோடு, அடுத்த வாரத்திற்குள் அரசாங்கம் இந்தச் சட்டமூத்தை நிறைவேற்றும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்க சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஓய்வூதியங்களை தவிர, முன்னாள் ஜனாதிபதிகள் அனுபவித்து வந்த பல சலுகைகள் இரத்து செய்யப்படுவதோடு, அரசாங்க வீடுகளில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதிகளை வெளியேற்றுவதே இந்தச் சட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே தற்போது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டை அனுபவித்து வருகின்றார்.
இதனால், சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டத்திற்கு அடிபணிந்து விஜேராமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

















