கட்டார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரிகளைக் குறிவைத்து நேற்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் 6பேர் உயிரிழந்தனர்.
ஆனால் தமது பேச்சுவார்த்தையாளர்கள் குழுவைக் கொல்லும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக காசா பகுதியில் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் அண்மைய முன்மொழிவு குறித்து விவாதிக்க ஹமாஸின் பேச்சுவார்த்தை குழு தோஹாவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் கூடியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இஸ்ரேலிய விமானங்கள் அந்த வளாகத்தின் மீது தாக்குதலை நடத்தியுள்ளன. இதனைக் கட்டார் அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது கோழைத்தனமான சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல் என்றும் அது கூறியுள்ளது.
அத்துடன் தாக்குதலில் ஹமாஸின் உயிரிழப்பு விபரங்களை அறிவிக்காமல் தமது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
எனினும் 2023 ஒக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலை ஏற்பாடு செய்த மூத்த ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதால் இந்தத் தாக்குதல் முழுமையாக நியாயமானது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் துரதிஸ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எனினும் ஹமாஸை ஒழிப்பது ஒரு தகுதியான இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த தாக்குதல் நடவடிக்கையில் 15 இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

















