மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் சத்துருக்கொண்டான் நாட்சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சுடர் ஏற்றி, மலர்தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1990 ம் ஆண்டு செப்ரெம்பர் 9 ஆம் திகதி சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, பனிச்சையடி போன்ற பிரதேசங்களை இராணுவத்தினர் மற்றும் ஊர்காவல்படையினர் சுற்றிவளைத்து அங்கிருந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 186 பேரை போயிஸ் ரவுண் இராணுவமுகாம் பகுதிக்கு அழைத்து சென்று அவர்களை வெட்டியும், துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்து ரயர்கள் போட்டு எரித்தனர்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நினைவுத் தூபியில் இடம்பெற்றது. அதில் மட்டு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன், பிரதி முதல்வர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், முன்னாள் மாநகரசபை முதல்வர் ரி.சரவணபவன், மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து 4 கிராமங்களைச் சேர்ந்த 4 பேர் ஒன்றிணைந்து பொதுச் சுடர் ஏற்றியதையடுத்து அங்கிருந்த அனைவரும் சுடர் ஏற்றி படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மசாந்தி வேண்டி, மலர்தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பின;னர், படுகொலை செய்யப்பட்ட இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியை அகழ்வுப் பணி முன்னெடுக்குமாறும் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என ஊடகங்கள் ஊடாக கோரிக்கை விடுத்தனர்.



















