முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இன்னும் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரியப்படுத்தியுள்ளார்.
அதன்படி இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி வீட்டை காலி செய்து மூன்று வாரங்கள் கடந்துவிட்டன என்றும், இன்னும் அதை உத்தியோகபூர்வமாக பொது நிர்வாக அமைச்சகத்திடம் ஒப்படைக்கவில்லை என்றும் அமைச்சர் நளிந்த செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை ரத்து செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்றியதை தொடர்ந்து, மகிந்த ராஜபக்ச அண்மையில் விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















