கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க உருத்திரபுரம் சிவன் ஆலயத்திற்கு பொது மக்களால் நேர்த்திக்காக வழங்கப்பட்ட மாடுகளை சட்டத்திற்கு புறம்பாக திருவிழாவுக்கு என நியமிக்கப்பட்ட குழுவினர் ஏலத்தில் விட்டமை பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ஆலயத்திற்கு பல்வேறு நேர்த்திக்கடன் நிமிர்த்தம் பொது மக்களால் வழங்கப்பட்ட மாடுகளை திருவிழாவுக்கு மட்டும் என நியமிக்கப்பட்ட நிர்வாகத்தினர் எவ்வித அனுமதியும் இன்றி பத்துக்கும் மேற்பட்ட மாடுகளை பல இலட்சங்களுக்கு ஏலத்தில் விட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொது மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியை தொடர்ந்து ஏலத்தில் விடப்பட்ட அனைத்து மாடுகளையும் மீளவும் ஆலயத்திற்கு பெற்றுக்கொள்ளுமாறு திருவிழா குழுவுக்கு கரைச்சி பிரதேச செயலகம் உத்தரவிட்டுள்ளது.
எவ்வித முறையான அனுமதியும் இன்றி சட்டத்திற்கு புறம்பாக மாடுகளின் சந்தை பெறுமதியை விட மிகவும் குறைந்த விலையில் திருவிழா குழுவினர் ஏலத்தில் விட்டுள்ளனர் எனவும், ஏற்கனவே உருத்திரபுரம் சிவன் ஆலயத்திற்கு சொந்தமான வயல் நிலங்கள் சில மாதங்களுக்கு முன் பல இலட்சம் ரூபாவுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ள போதும் அப் பணமும் இதுவரைக்கும் ஆலயத்தின் வங்கி கணக்கில் வைப்புச் செய்யப்படவில்லை எனவும் பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே கரைச்சி பிரதேச செயலக அதிகாரிகள் குறித்த ஆலயத்தின் விடயத்தில் தலையிட்டு பொதுச் சபையினை கூட்டி புதிய நிர்வாகத்தை தெரிவு செய்து ஆலயத்தின் வழமையான செயற்பாடுகள் தடையின்றி இடம்பெற வழி சமைக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.


















