யாழ்ப்பாணம் தையிட்டி – திஸ்ஸ விகாரைக்கு எதிரான போரட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
காணி உரிமையாளர் மற்றும் பொதுமக்களின் போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தையிட்டி – திஸ்ஸ விகாரைக்கு எதிராக குறித்த பகுதியில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும், காணிகளின் உரிமையாளர்களும், பொதுமக்களும் இன்று காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை குறித்த போராட்டத்தை நடத்தவுள்ளனர்.

இந்த நிலையில், தையிட்டி – திஸ்ஸ விகாரையில் காவல்த்துறையினர், இராணுவத்தின் முழுமையான பங்களிப்புடன் இன்று விழாவொன்று நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இதனையடுத்து, தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக மாதந்தோறும் போராட்டம் மேற்கொள்ளும் தரப்பினர் இது தொடர்பாகக் கவனம் செலுத்தியுள்ளனர்.
குறித்த போராட்டத்தில் பொதுமக்களும், சிவில் அமைப்புகளும் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



















