-சொ.வர்ணன்-
யாழப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள வலைத் தொழிற்சாலைக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், நேற்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டார்.
தொழிற்சாலையின் தற்போதைய செயற்பாடுகள், உற்பத்தித் திறன், தொழிலாளர்களின் நல்வாழ்வு மற்றும் தேவையான மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்வதே இவ்விஜயத்தின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.
வலைத் தொழிற்சாலைக்கு சென்ற அவர் வலை தயாரிப்பவர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் நிர்வாகப் பொறுப்பாளர்களுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார். தொழிற்சாலையின் சாதனங்கள், உற்பத்தி முறைகள், மூலப்பொருள் கிடைக்கும் வழிமுறை மற்றும் தயாரிப்புகளின் விநியோகச் செயல்முறைகள் பற்றியும் அவர் ஆராய்ந்தார்.
அத்துடன், தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள், உபகரணங்களின் பழைய நிலை, பராமரிப்பு குறைபாடுகள் மற்றும் உற்பத்தி விரிவாக்கம் தொடர்பான தேவைகள் குறித்தும் கவனம் செலுத்தினார்.
தொழிற்சாலை நிர்வாகிகளுடனான சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றின் போதும், தொழிற்சாலையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான அமைப்பு சார்ந்த மாற்றங்கள், தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் நிதி ஒதுக்கீட்டு தேவைகள் குறித்தும் அவர் ஆலோசனைகள் வழங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், கடல்சார் துறையில் முக்கிய பங்காற்றும் இந்த வலைத் தொழிற்சாலையின் செயல்திறன் உயரும் வகையில், சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்படும் என்று உறுதியளித்தார்.
இதன்போது, தொழிற்சாலை மேலாளர், பொறியியல் அதிகாரிகள், தொழிலாளர் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


















