சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 21 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு, இன்றையதினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல்கள் இடம்பெற்றன.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில், நாட்டில் 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனார்கள். பல பில்லியன் கணக்கான மதிப்புள்ள சொத்துக்களும் அழிவடைந்தன.
இந்த நினைவு நாளை முன்னிட்டு, ‘தேசிய பாதுகாப்பு தினத்தின்’ முக்கிய நினைவு நாள் காலியில் உள்ள ‘பேரலிய சுனாமி நினைவிடத்தில்’ நடைபெற்றதுடன், நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டன.
யாழ். உடுத்துறை

21 ஆவது ஆண்டு சுனாமி நினைவேந்தல் நினைவேந்தல் உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நடைபெற்றது. சுனாமி நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலமை கிராம சேவையாளர் தோமஸ் யூட் மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைக்க, அதனை தொடர்ந்து வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் தங்கவேல் தங்கரூபன் உட்பட அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், ஆகியோர் மலர்மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர்.
கிளிநொச்சி

சுனாமி ஆழிப்பேரலையின் நினைவு தின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
தேசியக்கொடி கொடி ஏற்றலுடன், சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. .
இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் எஸ்-முரளிதரன், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி பொலிஸ்மா அதிபர், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
வவுனியா

வவுனியா, பூந்தோட்டத்தில் அமைந்துள்ள இலங்கையின் முதலாவது சுனாமி நினைவாலயத்தில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் ஏற்பாட்டில் நினைவு கூறப்பட்டதோடு தித்வா புயலில் பாதிக்கப்பட்டவர்களும் இதன்போது நினைவு கூறப்பட்டது.
வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவினால் சுனாமி பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி சுடர் ஏற்றப்பட்டதோடு டித்வா புயலினால் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி சுடரினை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் ஏற்றி வைத்தார்.
முல்லைத்தீவு

முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
அந்தவகையில், உயிரிழந்தவர்களின் உறவுகள், தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி, உணவுப்பொருட்களைப் படையலிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை மேற்கொண்டனர்.
மேலும், இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார்

சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மன்னார் பிரதான பாலத்தடியில் முன்னெடுக்கப்பட்டது.
கலங்கரை கலை இலக்கிய நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் இயக்குனர் ஏ.ரி.மேகன்ராஜ் தலைமையில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலர் இணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை, சுனாமி பேரலையின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் மன்னார் மாவட்டச் செயலகத்திலும் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டு தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
புதுக்குடியிருப்பு
புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையுடன் இணைந்து சுனாமியால் உயிர்நீத்த ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு ஐயனார் கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்ட சுனாமி நினைவாலயத்தில் உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்இ சுனாமியால் பறிபோன மூன்று பிள்ளைகளின் தயாரான மைக்கல் றெசிலின் ராணி அவர்களால் பொது சுடர் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து ஏனையவர்கள் சுடர் ஏற்றினர். நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் த.நவநீதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மதகுருமார்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், வினோநோதாரலிங்கம், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான சி.குகனேசன், சி.வேதவனம், வர்த்தக சங்கத்தினர், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திருகோணமலை – மூதூர்

திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் ஆழிப்பேரலையின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், அவர்களின் ஆன்மா சாந்திக்காக பிரார்த்தனை நிகழ்வு மூதூர் தக்வா நகர் ஏ.சி.பள்ளிவாசலில் காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது.
இந்த நிகழ்வு ஈராக் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
திருகோணமலை – பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகம்

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி இன்று திருகோணமலை – பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்தில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் பிரதேச செயலாளர், கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மட்டு. ஓந்தாச்சிமடம்

மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடம் கிராமத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் உயிரிழந்தவர்களுக்கு சுடர் ஏற்றி, மலர்தூபி உறவினர்கள் அஞ்சலி தெலுத்தினர்.
இதன்போது, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உருத்திரன் உதயஸ்ரீதர், பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், ஏனைய கிராம மட்ட பொது அமைப்புக்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று
தேசிய பாதுகாப்பு தினமும், சுனாமி ஆழிப் பேரலையின் நினைவு தினமும் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செய்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஏனைய ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
தம்பலகாமம்

தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி .ஜெயகௌரி ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் ஆழிப்பேரலையின் போது உயிர் நீத்த உறவுகளுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியுடன் இறை வணக்கமும் நடைபெற்றது. இதன் போது சுனாமி தொடர்பிலான நினைவு பேருரையும் இடம் பெற்றதுடன் திட்வா புயல் அனர்த்தம் தொடர்பிலான நினைவுகளும் பேருரைகளான பிரதேச செயலாளர் உரையாற்றினார்.
இதில் உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட பதவி நிலை உத்தியோகத்தர்கள், சக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
ஹட்டன்
ஹட்டன் டிக்கோயா நகர சபையின் செயலாளர், ஊழியர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஹட்டன் நகர சபை பிரிவு குடியிருப்பாளர்கள் இணைந்து சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
மேலும், ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளுடன் உயிரிழந்தவர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இம்முறை தேசிய பாதுகாப்பு தினத்தில் சுனாமி பேரழிவினால் மட்டுமன்றி ஏனைய அனர்த்தங்களினாலும் உயிரிழந்தவர்களும் நினைவுகூரப்பட்டனர்.


















