-நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எச்சரிக்கை-
-ஆக்கிரமிப்பு பேய்களுக்கு கடிவாளமிடவும் கோரிக்கை-
-வி.சரவணன்-
மகாவலி அதிகாரசபை, வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றினால் அநுர அரசாங்கம் வீழ்ச்சி உறுதி செய்யப்படுவதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர், ஆக்கிரமிப்பு பேய்களுக்கு கடிவாளமிடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் கூறினார்.
மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் 09.02.2026 நேற்று இடம்பெற்ற தெளிவூட்டல் கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போது நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
கடுமையான அழுத்தங்களினாலேயே மகாவலி கலந்துரையாடலுக்கு அழைப்பு
கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பில் விளக்கம் தருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு, கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த திட்டத்தால் பாதிக்கப்படப்போகின்ற மக்களை ஒருபோதும் மகாவலி அதிகாரசபை அழைத்து கலந்துரையாடவில்லை.
கடந்த 23.01.2026 அன்று பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற கிவுல் ஓயாத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் இந்த கிவுல் ஓயாத் திட்டத்தினால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மக்களோடு கலந்துரையாடலை ஏற்படுத்துமாறு கோரியிருந்தோம்.
கடந்த 02.02.2026ம் திகதி பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. எமது அழுத்தங்கள் காரணமாகவே இவ்வாறு இந்தக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
தமிழர் இடங்கள் தொடர்பான விபரங்களை மூடி மறைக்கும் மகாவலி அதிகாரசபை
இந்த திட்டத்திற்காக அபகரிக்கப்படுகின்ற தமிழ் மக்களின் விபரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. கூழாங்குளம் வயல்காணிகள் 88 ஏக்கர், வெடிவைத்தகல்லு 87 ஏக்கர், வெடிவைத்த கல்லு கிராமம் 124 ஏக்கர், ஈச்சங்குளம் வயல் 95 ஏக்கர், கோவில் புளியங்குளம் 158 ஏக்கர், காட்டுப்பூவரசங்குளம் 258 ஏக்கர், காஞ்சூரமோட்டைக்கிராமம் 100 ஏக்கர் உள்ளடங்கலாக மொத்தம் 910 ஏக்கர் அபகரிக்கப்பட்டுள்ளதாக கிவுல் ஓயா திட்டம் தொடர்பான அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் தற்போது அந்த விடயங்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்படவில்லை.
தமிழருக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியே மகாவலி அதிகாரசபை
மகாவலி அதிகாரசபை என்றால், மரணத்தை ஏற்படுத்துகின்ற வலி என்றே தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அபிப்பிராயம் இருக்கின்றது. மகாவலி அதிகாரசபையினை தமிழ்மக்கள் அவ்வாறே கருதுகின்றனர். மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவிலையோ, வவுனியாவிலையோ ஒரு தமிழ் மகனுக்கு காணிகளை வழங்கவில்லை. தமிழ் மக்களின் பூர்வீகக்காணிகளை அபகரித்து பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிகின்ற வேலைகளையே மகாவலி அதிகாரசபை செய்கிறது. ஆகவே மகாவலி அதிகாரசபை, மரணத்தைத் தருகின்ற வலி எனத் தமிழ் மக்கள் கருதுகின்றனர்.
கிவுல் ஓயாத் திட்டத்தில் பாதிக்கப்படுகின்ற தமிழ் மக்கள் அழைக்கப்படவில்லை
கடந்த 1984, 1985ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே இந்தப் பகுதிகளில் பெரும்பான்மையினத்தவர்கள் வலிந்து குடியேற்றப்பட்டனர். தற்போதைய ஆட்சியாளர்கள் இவ்விதமான திட்டங்களைச் செயற்படுத்த முயற்சிக்கும்போது பாதிக்கப்படுகின்ற மக்கள் அனைவரையும் அழைத்துத் தெளிவுபடுத்த வேண்டும். இந்தக் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட பெரும்பான்மையின கமக்கார அமைப்புக்களைச் சாரந்தவர்களுக்கு கருத்துக்கூறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. எனினும் இத்திட்டத்தால் பாதிப்புக்களை எதிர்நோக்குகின்ற, இத்திட்டத்தினால் தமது நிலங்களை இழக்கின்ற தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
எனவே, பாதிக்கப்படுகின்ற எமது அப்பாவித் தமிழ் மக்களுக்கு இந்தக் கலந்துரையாடலில் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு சந்தப்பம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கூழாங்குளம் கமக்கார அமைப்பு, வெடிவைத்தகல்லு கமக்கார அமைப்பு, ஈச்சங்குளம் கமக்கார அமைப்பு, கோவில் புளியங்குளம் கமக்கார அமைப்பு என்பன இந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இவ்வாறாக மகாவலி அதிகாரசபை இத்திட்டத்தினால் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள எமது தமிழ் மக்களைப் புறக்கணித்து இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறே ஒவ்வொரு விடயங்களிலும் மகாவலி அதிகாரசபை எமது தமிழ் மக்களைப் புறக்கணிப்புச் செய்து வருகின்றது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை இந்தக் கலந்துரையாடலில் புறக்கணித்துவிட்டு ஏற்கனவே மணலாற்றில் வலிந்து குடியேற்றப்பட்ட 4,372 பெரும்பான்மையினக் குடும்பங்களையும், குடியேற்றப்படவுள்ள 1,626 பெரும்பான்மையினக் குடும்பங்களையும் இத்திட்டத்தில் உள்வாங்க மகாவலி அதிகாரசபை முயற்சிக்கின்றது.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் வீழ்ச்சிக்கு மகாவலி காரணமாக அமையும்.
தமிழர் தாயகப்பரப்புக்களில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் போன்ற திணைக்களங்களே தமிழ் மக்களின் காணிகளை அதிகளவில் அபகரிப்புச் செயற்பாடுகளை மேற்கொண்டு பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்ற வகையில் செயற்படுகின்றன. இந்த திணைக்களங்களே இந்த ஆட்சியாளர்களின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைவார்கள். எனவே இந்த திணைக்களங்களின் அத்துமீறிய அபகரிப்புச் செயற்பாடுகளுக்கு கடிவாளமிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.


















