யாழ்ப்பாணத்தில் அன்று ஜனாதிபதி எந்தவொரு பாதுகாப்புப் படையுமின்றி பாதுகாப்பாக வீதியில் நடந்து சென்றார். அவ்வாறிருந்த யாழில், போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்பியுள்ளார்.
அல்லைப்பிட்டியில் நேற்று அதிகாலையில் வானில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பொலிஸாரின் சமிஞ்ஞையை மீறியதாக தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 17 வயதுச் சிறுவன் உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் நடந்த இடத்திற்கு இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் சென்றனர். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் போர் இல்லாதவேளையிலும் நேற்று சிறுவன் ஒருவன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டான். இதனூடாக பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.
சிறுவன் பயணித்த வாகனத்திற்குள்ளே சாணம் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மாடு உள்ளே இருந்தால் சாணம் ஆங்காங்கே தென்பட்டிருக்கும். ஆனால் விபத்திற்குப் பிற்பாடு தான் அந்த சாணம் போடப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுகின்றது.
வாகனத்தின் பயணத்தை நிறுத்தவே நடவடிக்கை எடுக்க வேண்டும் சாரதியை சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா?
வான் நின்ற இடத்திலிருந்து 50 அடி தூரத்தில் சாணம் கொண்டு வந்த பை காணப்படுகின்றது. மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அந்த பையை காட்டிய பின்னர் அது குறித்த இடத்திலிருந்து அது வீசப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய நபர்களாக பொலிஸார் காணப்படுகின்றனர். அவர்கள் எவ்வகையில் உண்மையாக விசாரணைகளை நடத்துவார்கள் என்பதை எவ்வாறு நாம் நம்ப முடியும்.
வட கிழக்கிலிருந்த இராணுவம், பொலிஸார் அப்போது அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி பல சித்திரவதைகளை செய்தார்கள். அதுபோன்றே தற்போதும் இந்த அரசாங்கம் பயங்கரவாதச் சட்டத்தைக் கொண்டுவர முயல்வதாக சந்தேகம் எழுகிறது.
போரில்லாத நேரத்தில் குற்றமிருந்தாலும் ஒரு நபரை சுட்டுக்கொல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்க விடயம்.
இது தொடர்பில் நம்பக்கூடிய நீதியான சுயாதீன விசாரணையை குற்றவாளியே விசாரணை செய்யக்கூடியதை நம்பமுடியாத நிலையே இந்த நாட்டின் துரதிஷ்டமான உண்மை எனக் கூறினார்.


















