-த.அம்பிகாவதி-
யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று முன்தினம் திங்கட்கிழமை பலாலியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலிருந்த பொதுமக்களின் காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டமைக்காக ஆளுநர் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், தொடர்ந்தும் விடுவிக்கப்படாதுள்ள ஏனைய காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கட்டளைத் தளபதியுடன் விரிவாக ஆராய்ந்தார்.
மேலும் வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களிடையே தேசிய மாணவர் படையணியின் செயற்பாடுகளை ஊக்குவிப்பது தொடர்பில் ஆளுநரின் தலைமையில் மாகாணக் கல்விச் சமூகத்தினருடன் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் குறித்து யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
தேசிய மாணவர் படையணியில் மாணவர்கள் இணைந்து கொள்வதன் ஊடாக, அவர்களிடையே சிறந்த நற்பழக்கவழக்கங்கள், ஒழுக்கம் மற்றும் ஆளுமைமிக்க தலைமைத்துவப் பண்புகள் என்பன சிறுவயதிலிருந்தே வளர்க்கப்படும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்த விசேட சந்திப்பில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிவில் விவகாரங்களுக்கான பிரதம ஒருங்கிணைப்பாளர் கேணல் டபிள்யூ.எம்.ஏ.எம்.நிஸ்ஸங்க, வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


















