யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய ‘ஆட்டக்காரி’ நெல்லினத்தை பிராந்திய நெல்லினமாக பரிந்துரைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் உத்தரவாதம் வழங்கியுள்ளார்.
வடமாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் தலைமையில் நேற்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின்போதே மேற்படி உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
நேற்றைய கலந்துரையாடலில், விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பரிந்துரை இதுவரையில் இல்லாத காரணத்தால் ஆட்டக்காரி நெல்லுக்கு நியாயமான நிர்ணய விலையைத் தீர்மானிப்பதிலும், விவசாயக் காப்புறுதியைப் பெற்றுக்கொள்வதிலும் விவசாயிகள் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நீண்டகாலப் பிரச்சினை கூட்டத்தில் ஆழமாக ஆராயப்பட்டதுடன், ஆட்டக்காரியை ஒரு பிராந்திய நெல்லினமாக உடனடியாகப் பரிந்துரைப்பதற்கான சாதகமான நடவடிக்கைகளை எடுப்பதாகப் விவசாயப் பணிப்பாளர் நாயகம் உத்தரவாதமளித்தார்.


















