-யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி-
-க.சபேஷன்-
பட்டதாரிகள் தொழில் தேடுபவர்களாக இருக்காது அறிவுத்திறனுடன் தொழில் முயற்சியாளர்களாக உருவாக வேண்டும். அதற்கான வழிகாட்டல்கள், பயிற்சிகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் தொடர்ந்து வழங்கும் என புதிய துணைவேந்தர் தி. வேல்நம்பி தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக உத்தியோகபூர்வமாக பதவியேற்ற பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகம் 12 பீடங்களைக் கொண்டு விளங்கும் பல்கலைக்கழகமாக காணப்படுகிறது. இலங்கையில் அதிகூடிய பீடங்களைக் கொண்ட பல்கலைக்கழகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகமே காணப்படுகிறது.
பல்கலைக்கழகத்தில் தற்போது 14 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்தப் பல்கலைக்கழகத்தை தாங்கிய, வழிநடத்தச் சென்ற அத்தனை துணைவேந்தர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு, அவர்களின் பணிகளை தொடர்ந்து வரும் காலங்களில் முன்னெடுத்து செல்வேன். அத்துடன் புதிதாக பல்வேறு நடவடிக்கைளை முன்னெடுக்க திட்டங்களை வைத்துள்ளேன்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சமூகத்தோடு இணைந்து இருக்க வேண்டும். பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் சமூகத்துடன் இணைத்து தமது பங்களிப்பைச் செய்ய வேண்டும்.
சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் எமது பல்கலைக்கழத்தை தரப்படுத்தலில் முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டும். அதற்கு பேராசிரியர்கள், பீடாதிபதிகள், நிர்வாக உத்தியோகத்தர்கள் எல்லோருடனும் இணைந்து செயற்படுவோம்.
புதிய கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. பட்டதாரிகள் வெறும் பட்டத்தை வைத்து அரச வேலை தேடுபவர்களாக இருக்காது , தமது துறை சார்ந்து சிறப்பாக செயற்பட கூடியவர்களாக மாற வேண்டும். அதற்காக அவர்களை வலுப்படுத்துவதற்கான பயிற்சிகள் பல்கலைக்கழக மட்டத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அறிவுத்திறன், ஆராய்ச்சி மற்றும் சமூக பொறுப்பு என்பவற்றை மாணவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன், சமூகத்தில் அக்கறையுள்ள அனைத்து துறை சார் வல்லுனர்களையும் எம்முடன் இணைத்து பயணிப்போம். அதற்கான எதிர்கால திட்டங்கள் என்னிடம் உண்டு அதனை நோக்கி நாம் பயணிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.


















