வடக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் தகவல்
யாழில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருந்த 11 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் காரியாலய கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்:-
யாழ்ப்பாணத்தில் உள்ள 11 பேர் மட்டும் அல்லாமல் மேலும் பலருக்கு எதிராக இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
பொதுமக்களிடம் பெறுகின்ற தகவல்களின் அடிப்படையில், சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்தவர்கள், போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு எதிராக இவ்வாறு நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
இந்த நடவடிக்கைகள் தொடர்பில் உரிய முறையில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என்றார்.


















