யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வழித்தடத்தில் பலாலி வீதியால் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் குறித்த பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,
திருநெல்வேலி அம்மாச்சி உணவகம் அருகே நேற்று மாலை 5.30 மணியளவில் இளைஞர் ஒருவர் குறித்த பேருந்தில் ஏறி பயணித்தார்.
குறித்த இளைஞர் 100 ரூபாவைக் கொடுத்து நடத்துனரிடம் பலாலி சந்தி எனக் குறிப்பிட்டு ரிக்கெட் எடுத்தார். நடத்துனர் மீதி 10 ரூபாயை இறங்கும் போது தருகிறேன் எனக் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட இளைஞர் 70 ரூபாய் ரிக்கெட்டுக்கு எதற்கு 100 ரூபாய் வாங்குகிறாய் என நடத்துனரிடம் கடுமையாக முரண்பட்டார்.
அதற்கு நடத்துனர் எங்களுக்கு பயணிகளிடம் கூடுதலாக பணம் அறவிட வேண்டிய அவசியமில்லை, பேருந்தின் கதவுக் கண்ணாடியில் கட்டண விளக்கம் ஓட்டப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெளிவடையுமாறு கூறியுள்ளார்.
கோண்டாவில் சந்தியில் மீண்டும் குறித்த இளைஞர் முரண்பட்டதனை தொடர்ந்து 100 ரூபாவை இளைஞரிடம் வழங்கிய நடத்துனர், எங்கள் பேருந்தில் இருந்து இறங்கி பின்னுக்கு வரும் பேருந்தில் ஏறி வருமாறு கூறினார்.
இதனையடுத்து கையில் வைத்திருந்த தலைக்கவசத்தால் நடத்துனரைத் தாக்கிய இளைஞர், பேருந்தின் படியில் இருந்தும் அவரை கீழே தள்ளி விழுத்தினார்.
சம்பவ இடத்துக்கு வந்த கோப்பாய் பொலிஸார் இரு தரப்பையும் விசாரித்ததைத் தொடர்ந்து குறித்த இளைஞரை கைது செய்தனர்.
குறித்த இளைஞனை பொலிஸார் இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
















