-யாழ். மாவட்ட செயலகமும் முடக்கப்படும்-
-பா.பிரதீபன்-
யாழ். மாவட்டத்தின் கரையோரப் பகுதிவரை அத்துமீறி வரும் இந்திய மீனவர்களால் முற்றுமுழுதாக தாம் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம் என்று சுட்டிக்காட்டியுள்ள யாழ்.மாவட்ட மீனவர்கள், இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை நிறுத்தாவிட்டால் கடலில் இறங்கிப் போராட்டத்தினை நடத்துவோம் என்று எச்சரித்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு தொடக்கம் நெடுந்தீவு வரையான மீனவ சங்க பிரதிநிதிகள் நேற்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ்.மாவட்ட நீரியல்வளத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கிறிஸ்ணன் அகிலனை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது மேற்படி எச்சரிக்கையினை விடுத்திருந்த மீனவ சங்கப் பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கையில்:-
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் யாழ். மாவட்ட மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை முற்றுமுழுதாக இழந்துள்ளனர். குறிப்பாக அண்மை நாட்களாக நாகபட்டினம் – காரைக்கால் மீனவர்களின் இழுவைப்படகுகள் யாழ்.மாவட்டத்தின் கரையை அண்மித்து மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றது.
இவ்வாறு அத்துமீறும் இந்திய மீனவர்களை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் கடலில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படும்.
இதற்கு முன்பதாக அடையாளமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து நீரியல்வளத் திணைக்களத்தின் முன்னிருந்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்து மாவட்டச் செயலகம் வரை பேரணியாக செல்லவுள்ளோம்.
அங்கு செல்லும் மீனவர்கள் மாவட்டச் செயலகத்தை முடுக்கி போராட்டத்தை நடத்துவோம் என்றனர்.















