-சி.ஜெகதீஸ்வரன்-
வடமராட்சி துன்னாலைப் பகுதியில் எலிக் காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் துன்னாலை தெற்கு, வேம்படிப் பகுதியைச் சேர்ந்த சிங்கராஜா சிவராஜசிங்கம் (வயது-66) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.
மூன்று நாட்கள் காய்ச்சல் காரணமாக கடந்த வியாழக்கிழமை காலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மாலை உயிரிழந்தார்.
இம் மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை நெல்லியடி பொலிசார் நெறிப்படுத்தினர்.
எலிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கூறப்படும் நிலையில் வயல் வேலைகளில் ஈடுபடுவோர் மற்றும் வெள்ளங்களிற்குள் செல்வோர் பாதுகாப்பான முறையை கையாளுமாறு கோரப்படுகிறது.


















