வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளினால் ஏற்படும் செலவுகளை ஈடு செய்வதற்கு பாவனையாளர்களின் மின்சார கட்டணங்களில் 2 சதவீதம் அறவிடப்படும் என்ற அரசாங்கத்தின் முன்மொழிவு மின்சார பாவனையாளர்களுக்கு மேலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் செயற்பாடல்ல என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன்இ நடைமுறையில் உள்ள செலவு பகிர்வை உத்தியோகப்பூர்வமாகவும் வெளிப்படையாகவும் ஒழுங்குபடுத்தும் முயற்சி எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் வலுசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபலா இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளால் ஏற்படும் செலவுகளை உரிய நகர மற்றும் மாநகர சபைகள் ஏற்க வேண்டும்.
ஆனால் பல உள்ளூராட்சி அமைப்புகள் இதுவரை மின்சார சபைக்குச் செலுத்த வேண்டிய மின்சார கட்டணங்களைச் செலுத்தத் தவறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி செலுத்தப்படாத மின்சார கட்டணங்கள் மின்சார சபையின் இழப்பாகக் கணக்கிடப்படுகின்றன. இந்த இழப்புகள் மின்சார சபையின் மொத்த இழப்புகளில் 2 சதவீதம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளும் மின்சார கட்டணத் திருத்தங்கள் மூலம் இந்த இழப்புகள் மின்சார பாவனையாளர்களிடம் இருந்து பெறப்படுப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் வலுசக்தி அமைச்சரைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.


















