-அன்ரனி திலக்-
அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட பிரஜா சக்தி முறைமை மக்களுடைய ஆணையை அவமதிக்கும் ஒரு செயலென தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நேற்று ஆழியவளை சக்தி அம்மன் ஆலய அன்னதான மண்டபத்தை திறந்துவைத்து உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
குடிமக்கள் மத்தியில் தங்களுடைய கட்சியை கொண்டு வந்து பொருத்துவதற்காக, நாட்டில் ஒரு கட்சி ஆட்சியை நிலை நிறுத்துவதற்கான செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வேளையிலே அதற்கு மாற்றீடாக இந்த பிரஜா சக்தியை கொண்டு வருகிறார்கள். அண்மையில் பருத்தித்துறை பிரதேச சபையில் பிரஜா சக்திக்கு எதிரான விவாதத்தில் எமது உறுப்பினர்கள் சிறப்பாக செயற்பட்டார்கள். அவர்களை பாராட்டுகின்றேன்.
நாங்கள் ஏன் இந்த பிரஜா சக்தி முறையை எதிர்க்கிறோம் என்றால் நீங்கள் எல்லாம் வாக்களித்து, மக்களுடைய வாக்கு பலத்தாலே மக்கள் அமைத்திருக்கின்ற உள்ளூராட்சி என்ற சபையை கைவிட்டு அதற்குப் பதிலாக தங்களுடைய பிரஜா சக்தியை கொண்டு வந்து புகுத்துவதை மக்களாலே தெரிவு செய்யப்பட்ட சபைகள் கண்டிக்கின்றது
நாங்கள் பிரஜா சக்தி அமைப்பை கண்டிக்கிறோம் என்பது இங்கே வருகின்ற அபிவிருத்திகளை வேண்டாம் என்று சொல்வதல்ல. அபிவிருத்தி மக்களுடைய அபிவிருத்தியாக இருக்க வேண்டும். அபிவிருத்தி என்பது மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தான் அந்த அபிவிருத்தியை தீர்மானிக்க வேண்டும் அதுதான் பிரஜா சக்தியாக இருக்க வேண்டும்.
மக்களிடத்தில் இதனை நாங்கள் தெளிவுபடுத்த வேண்டும் நாங்கள் அபிவிருத்திகளுக்கு எதிரானவர்கள் அல்ல அபிவிருத்திகள் சரியான முறையில் சரியானவர்களால் மக்கள் பிரதிநிதிகளால் செய்யப்பட வேண்டும் இல்லை என்று சொன்னால் அது பிரஜா சக்தி கிடையாதென தெரிவித்தார்.


















