ஆவரங்கால் தொண்டைமானாறு வீதி புனரமைக்கும் வேலைத்திட்டம் இன்று புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த வீதி புனரமைப்பிற்கான பெயர்ப்பலகையினை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்னாயக்க திரை நீக்கம் செய்து வைத்தார்.
ஆவரங்கால் தொடக்கம் தொண்டைமானாறு வரையிலான 6.30 மீற்றர் நீளம் கொண்ட குறித்த வீதியானது 670 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ளது.
இன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் வேலைத் திட்டம் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்படும் என ஒப்பந்தக்காரர்கள் தெரிவித்தனர்.
நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்னநாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், பவானந்தராஜா, வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரை நிகழ்த்திய அமைச்சர் பிமல்,
கல்வி அமைச்சரின் விவகாரம் தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவரின் சில செயற்பாடுகள் தொடர்பிலும் தெரிவித்தார்.
மேலும் எமது அரசாங்கம் கொழும்பை மையமாகக் கொண்டு அரசியல் நடாத்தாது. இலங்கை முழுவதையும், வடக்கு – கிழக்கை ஒன்றிணைத்து அனைத்து அபிவிருத்தி வேலை திட்டங்களையும் செய்து தருவதற்கு முன்வந்துள்ளது.
நாமல் ராஜபக்ஷ, சஜித் பிரேமதாச போன்றோர் சிறு விடயங்களை கூட பாரதூரமாக குழப்ப முயற்சிக்கின்றனர். எனவே மக்கள் எமது ஆட்சியில் சரியான அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியும்.
அதே போல இனவாதம் பேசுவதற்கும் நமது ஆட்சியில் இடமளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய ரஜீவன் ஜெயச்சந்திரன் மூர்த்தி,
எமது அரசாங்கம் கூறியது போல ஜனாதிபதி தெரிவித்தது போல வடக்கிற்கு கிழக்கிற்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டு மக்களுக்கான அபிவிருத்தி வேலை திட்டங்கள் அனைத்தும் முன் கொண்டு செல்லப்படும்.
கடந்த ஆட்சியாளர்கள் போல் இல்லாது நமது அரசாங்கம் மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு வினைத்திறனாக செயலாற்ற முன்வந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர்,
அரசாங்க அதிபராக தான் கடமையாற்றிய காலத்தில் குறித்த வீதியானது பயணிக்க முடியாத நிலையிலும், வீடு தொடர்பில் அவர்தி பணிகளை மேற்கொள்ளுமாறு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று இருந்தது.
ஆனால் எம்மால் வேலைத்திட்டங்களை முழுமையாக செய்ய முடியவில்லை. தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் மக்களின் தேவைகளை அறிந்து அபிவிருத்தி திட்டங்களை பூர்த்தி செய்து தருவதற்கு இணங்கியுள்ளது.
எனவே இந்த அரசாங்கமானது மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு தேவையான சகல திட்டங்களையும் மேற்கொள்ளும் என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன் என தெரிவித்தார்.


















